கோவிட்-19 இன் நீண்டகால விளைவுகளுடன் பல நாடுகள் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஓரிரு நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு குணமடைந்தனர், மேலும் அவர்களின் தூக்கமும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் சிலருக்கு, மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் பிற அறிகுறிகள் தோன்றி நீண்ட காலத்திற்கு அவர்களின் தூக்கத்தை பாதித்தன.
தூக்கத்தைப் பாதிக்கும் இரண்டு காரணிகள் உள்ளன – ஒன்று தூண்டுதல் காரணி, மற்றொன்று நிரந்தரமான காரணி (மோசமான தூக்கப் பழக்கம் போன்றவை). “நீண்டகால கோவிட் தொற்று ஏற்பட்டால், தூக்கம், தொற்று போன்ற தூண்டுதல் காரணிகளால் பாதிக்கப்படுகின்றனர்” என்று பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையின் நுரையீரல் துறைத் தலைவர் டாக்டர் ரவீந்திர மேத்தா கூறுகிறார்.
ஜர்னல் ஆஃப் மெடிக்கல் இன்டர்நெட் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட் உள்ளவர்களுடைய தூக்கத்தின் தரத்தை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்குத் தூக்கக் கலக்கம் அதிகரித்திருப்பதையும், மற்றவர்களுக்குத் தூக்கத்தின் தரம் குறைந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். சிலருக்கு மிகுந்த சோர்வு இருந்தது, மற்றவர்களுக்கு தூக்கமின்மை இருந்தது. சிலருக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தது, மற்றவர்களுக்கு பகலில் தூங்குவதில் சிக்கல் இருந்தது, சிலர் எழுந்ததும் புத்துணர்ச்சியை உணரவில்லை.
நீண்டகால கோவிட், தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துமா?
கோவிட் கவலை மற்றும் சுவாச அறிகுறிகளை ஏற்படுத்தும், இது தூக்கத்தில் தலையிடலாம் மற்றும் தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கம் தொடர்பான சிக்கல்களின் காலம் நபருக்கு நபர் மாறுபடும். இருப்பினும், சிலர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வாரங்கள் அல்லது மாதங்கள் கடந்த பிறகும் சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற தொடர்ச்சியான அறிகுறிகளை அனுபவிக்கலாம். சில சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியான அறிகுறிகள் சுவாசச் செயல்பாடு அல்லது நபரின் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம், இதன் விளைவாக தூக்கக் கலக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் தலையீட்டு நுரையீரல் ஆலோசகர் டாக்டர் சுனில் குமார் K கூறுகிறார்.
தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளிகளிடையே தூக்கப் பிரச்சனைகள் பொதுவானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவிட் நோயின் மற்றொரு நீண்ட கால அறிகுறியான மூச்சுத் திணறலுடன் தூக்கக் கலக்கத்தை இந்த ஆய்வு இணைத்துள்ளது. கோவிட்-க்கு பிந்தைய தூக்கப் பிரச்சனைகளில் தசை செயல்பாடு குறைவதோடு, நீண்டகால கோவிட் நோய்த்தொற்றுடன் தொடர்புடைய பதட்டத்துடனும் அதற்குத் தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முன்னர் மனச்சோர்வு அல்லது பதட்டம் கண்டறியப்பட்டவர்களில் திருப்தியில்லாத தூக்கத்தை ஆய்வு எடுத்துக்காட்டுகிறது; சுவாசிப்பதில் சிரமம் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் பலரும் புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர் அல்லது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் போன்ற நோய்கள் உள்ளவர்களாக இருந்தனர்.
தூக்கமின்மை மற்றும் நீண்ட கோவிட் உடனான அதன் தொடர்பு
ஸ்லீப் மெடிசின் ஜர்னலின் டிசம்பர் 2023 பதிப்பில் வெளியிடப்பட்ட இன்சோம்னியா மற்றும் நீண்ட கால கோவிட் இடையேயான தொடர்பைப் பற்றிய சர்வதேச கூட்டு ஆய்வில், தூக்கமின்மைக்கும் நீண்ட கால கோவிட் நோய்க்கும் இடையிலான உறவு என்பது இருதரப்புக்கும் பரஸ்பரம் இருப்பது என்பது கண்டறியப்பட்டது. நீண்ட கால கோவிட் நோயைத் தடுப்பதற்கும் சமாளிப்பதற்கும் தூக்கமின்மையை நிவர்த்தி செய்வதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில், குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவது சவாலானதாக இருக்கலாம். “கொரோனாசோம்னியா என்பது கோவிட்-19 தொற்றுநோய்களின் போது ஒரு தனிநபருக்கு ஏற்படும் தொற்றுநோயால் தூண்டப்பட்ட கவலைகளால் ஏற்படும் தூக்கக் கோளாறுகளை விவரிக்க உருவாக்கப்பட்ட ஒரு சொல்” என்று டாக்டர் குமார் விளக்குகிறார். கரோனாசோம்னியா உங்கள் தூக்கத்தை பாதிக்கும் பின்வரும் வழிகளையும் நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்:
- அதிகரித்த பதட்டம், இதன் விளைவாக தூக்கமின்மை.
- உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் சர்க்காடியன் ரிதத்தைத் தொந்தரவு செய்யலாம்.
- அதிக நேரம் மொபைல் பார்ப்பது தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கிறது.
- சுவாச பிரச்சனைகள் போன்ற தொற்றுநோய் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள், தூக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.
- பொருளாதார ரீதியான நிச்சயமற்ற தன்மை மற்றும் சமூக தனிமை மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறது.
நீண்டகால கோவிட் தொடர்பான தூக்கப் பிரச்சனைகளைச் சமாளித்தல்
நீண்ட கால கோவிட் காரணமாக தூக்கமின்மை உங்கள் இருதயம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், இது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் மற்றும் உளவியல் காரணிகள் உட்பட உங்கள் ஆரோக்கியத்தின் முழுமையான மதிப்பீடு அவசியம். கோவிட்-19 உடன் தொடர்புடைய நீண்ட கால தூக்கச் சிக்கல்களை நிர்வகிக்க உதவும் சில பயனுள்ள உத்திகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன:
- நிலையான தூக்க அட்டவணையைப் பின்பற்றுதல்
படுக்கைக்குச் செல்லும்போதும், வார இறுதி நாட்கள் உட்பட ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுந்திருக்கும்போதும் ஒரு சீரான நேரத்தைப் பின்பற்றுவதும் உங்களின் தூக்க-விழிப்பு சுழற்சியை மேம்படுத்த உதவும்.
- ரிலாக்ஸ் ஆவதற்கான விஷயங்களைச் செய்தல்
கவன உணர்வுப் பயிற்சி மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற விஷயங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம், இதனால் தூக்கப் பிரச்சனைகளுக்கு பங்களிக்கும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.
- உடற்பயிற்சி
உடல் செயல்பாடுகளைப் படிப்படியாக மீண்டும் அறிமுகப்படுத்துங்கள், தனிப்பட்ட பயிற்சிகளைக் கருத்தில் கொள்வது தூக்கச் சிக்கல்களுக்கு உதவும். இருப்பினும், கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்ட பிறகு உடற்பயிற்சியை மீண்டும் தொடங்குவதற்கு இரண்டு வார இடைவெளியை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- மது அல்லது காஃபின் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள்
மது அல்லது காஃபின் உட்கொள்வது தூக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
- மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது
மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் கோவிட்-19 உள்ள நபர்களின் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். மெலடோனின் சப்ளிமெண்ட்ஸ் பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், அதை எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு சுகாதார நிபுணரைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
- மருத்துவ உதவியை நாடுங்கள்
தூக்கப் பிரச்சனைகள் மிக நீண்ட காலமாக நீடித்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணரின் உதவியை நாடுவது நல்லது.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக மீண்டிருந்தாலும், சிலருக்கு அதன் விளைவாகத் தூக்கத்தில் நீண்டகால பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.
- கரோனாசோம்னியா என்பது கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, தொற்றுநோயால் தூண்டப்பட்ட கவலைகளால் ஏற்படும் தூக்கக் கோளாறுகளை விவரிக்க உருவாக்கப்பட்ட வார்த்தையாகும்.
- ஒரு நிலையான தூக்க அட்டவணையைப் பின்பற்றுவது மற்றும் மது அல்லது காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது நீண்ட கால கோவிட் தொடர்பான தூக்கப் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவும்.