அலர்ஜி என்றவுடன் நமக்கு மூக்கடைப்பு, தும்மல் அல்லது சொறி போன்றவை தான் நினைவுக்கு வரும். நம்மைச் சுற்றி இருக்கும் சில பொருட்கள் அல்ர்ஜிக்கான பல்வேறு அறிகுறிகளைத் தூண்டி, நம்முடைய அன்றாட வாழ்வில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், நீண்ட காலமாகக் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கும் பொதுவான அலர்ஜி பிரச்சனைகள், தூக்கத்தில் மூச்சுத்திணறல் (sleep apnea) போன்ற தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும், இது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?
நமக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் இந்த அலர்ஜி ஏற்படுகிறது (அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள்), இது காற்று, நீர், உணவு அல்லது தொடுதல் மூலம் பரவுகிறது. நம்முடைய உடல், அலர்ஜியை ஏற்படுத்தும் இந்தப் பொருட்களை அந்நிய சக்தியாக நினைத்து அதை எதிர்த்துப் போராடுவதற்காக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கத் தொடங்குகின்றன.
“அலர்ஜி என்பது ஒரு தனித்துவமான நிகழ்வு. நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களை நாம் உள்ளிழுக்கும்போதோ அல்லது உட்கொள்ளும்போதோ, நமது நோயெதிர்ப்பு மண்டலம் மிதமான அல்லது கடுமையான முறையில் எதிர்வினையாற்றி, பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த அலர்ஜி, நாசியழற்சி (allergic rhinitis) பிரச்சனை போன்ற எளிமையானதாகவோ அல்லது ஆரம்பத்திலேயே கவனிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாகக் கூட மாறலாம்,” என்று சென்னை, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த காது, மூக்கு தொண்டை மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் M.N. சங்கர் கூறுகிறார்.
ஏர் கன்டிஷ்னர் என்று அழைக்கப்படும் ஏசிகள் அலர்ஜி பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்
அலுவலகத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் அலர்ஜி பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ஏசி, இது அலுவலகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வெப்பநிலையில் மாறுபாட்டை உருவாக்குகிறது. “ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் [குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில்] பொதுவாக குளிரூட்டப்பட்ட சூழலில், சுமார் 18-19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் மாறுபட்ட வெப்பநிலை அவர்களைப் பூஞ்சை தொற்றுக்கு ஆளாக்குகிறது, அத்துடன் அவர்களின் அலர்ஜி பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகிறது, இது தூக்கத்தையும் சீர்குலைக்கும்” என்று கூறும் டாக்டர் சங்கர், ஏசியின் வெப்பநிலையை வெளி வெப்பநிலையை விட ஐந்து முதல் ஆறு டிகிரி குறைவாக வைப்பதுடன், ஏசி காற்று நேரடியாக நம் மேல் படாதவாறு பார்த்து வேலை செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
அலர்ஜி பிரச்சனை நம்முடைய தூக்கத்தை எப்படித் தொந்தரவு செய்கிறது?
அலர்ஜி அறிகுறிகள் பல வழிகளில் தூக்கத்தைச் சீர்குலைக்கும் என்று பெங்களூரு, ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனையைச் சேர்ந்த, இன்டர்வென்ஷன் நுரையீரலியல் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முன்னணி ஆலோசகர் டாக்டர் பவன் யாதவ் கூறுகிறார். “நீங்கள் அலர்ஜி பிரச்சனைக்கு ஆளாகும்போது, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் ஹிஸ்டமைன்களை வெளியிடுகிறது, இது மூக்கடைப்பு, தும்மல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை ஏற்படுத்தும்,” என்று அவர் மேலும் விளக்குகிறார்.
மூக்கடைப்பு பிரச்சனை இருந்தால் மூக்கு வழியாகச் சுவாசிப்பது கடினமாக இருக்கும், இதன் விளைவாகக் குறட்டை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடும். கூடுதலாக, அலர்ஜியால் மூக்கிலிருந்து நீர் வடியும், அத்துடன் தொண்டை எரிச்சல் ஏற்படுகிறது, இது இருமலைத் தூண்டி, நிம்மதியாகத் தூங்க முடியாமல் போகலாம்.
அலர்ஜி பிரச்சனையால் இரவில் சரியாகத் தூங்க முடியாததால் பகலிலும் அதன் பாதிப்புகள் இருக்கும்
“ஒவ்வொரு குழந்தைக்கும் எட்டு மணிநேரம் நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவைப்படுகிறது, ஏனெனில் சரியாகத் தூங்காமல் இருந்தால் அது அவர்களின் கல்வி மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பாதிக்கும், இதனால் அவர்களுக்கு அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டுக் குணமடையத் தாமதமாகும்,” என்கிறார் டாக்டர் சங்கர்.
“இரவு நன்றாகத் தூங்கினால் உடல் நிலை விரைவில் குணமடையும் அதே நேரம், சரியாகத் தூங்கவில்லை என்றால் நம் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றும் செயல்முறையில் பாதிப்பு, வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளில் பிரச்சனை மற்றும் உடல் சரியாகக் குணமடைவதில் தடை ஆகியவை ஏற்படும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இரவில் போதிய உறக்கம் இல்லையென்றால் கவனம் குறைதல், பகல் நேர தூக்கம் மற்றும் எரிச்சல் ஆகியவை ஏற்படும். கூடுதலாக, இது மக்களின் நடத்தையைப் பாதிக்கலாம் மற்றும் சரியாக வேலை செய்ய முடியாமல் செய்ய வேண்டிய பணிகள் தடைபடும்.
போதிய தூக்கமின்மை சாலை விபத்துகளை ஏற்படுத்தும்
இரவில் போதுமான அளவுத் தூங்கவில்லை என்றால் அது உற்பத்தித்திறனைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பகல் நேர தூக்கம் விபத்துகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். “பகலில் தூக்கம் வருவது போன்ற உணர்வால் மக்களின் கவனம் குறைந்து, அறிவாற்றல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுறுசுப்பாகச் செயல்பட முடியாமல் மந்தமாவதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது,” என்கிறார் டாக்டர் சங்கர்.
கூடுதலாக, கனரக உபகரணங்களில் பணிபுரியும் தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் முறையற்ற தூக்கத்தின் விளைவாக ஏற்படும் மந்தத் தன்மையின் காரணமாகக் கடுமையாகக் காயமடையலாம்.
அலர்ஜி பிரச்சனையால் தூக்கக் கோளாறுகள் அதிகமாகும்
அலர்ஜியின் காரணமாகத் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற தூக்கக் கோளாறுகள் அதிகமாகலாம், இது தூக்கத்தின் போது சுவாசிப்பதில் அடிக்கடி ஏற்படும் தடங்கள் மூலம் வகைப்படுத்தப்படும். “நீங்கள் அலர்ஜியால் பாதிக்கப்படும் போது, மூக்கடைப்பும் வீக்கமும் ஏற்படுகிறது, இதனால் சுவாசப்பாதைகள் சுருங்கி, தூக்கத்தின் போது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் தான் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, இதன் விளைவாக இரவு தூக்கம் நிம்மதியான தூக்கம் இல்லாமல் அடிக்கடி விழிப்பு ஏற்படுவதுடன் பகல் நேர சோர்வும் ஏற்படுகிறது,” என்கிறார் டாக்டர் யாதவ்.
ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்திற்கு அலர்ஜிகளை நிர்வகித்தல்
அலர்ஜிகளை நிர்வகிக்க நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், இது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்:
- அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள் இல்லாத படுக்கையறை: தூசி, பூச்சி, அழுக்கு இல்லாமல் தலையணை மற்றும் மெத்தை உறைகளைச் சுத்தமாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும், படுக்கையைக் கண்டிப்பாக வெந்நீரில் துவைக்க வேண்டும், படுக்கையறையில் இருந்து அர்லர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை (செல்லப் பிராணிகள் போன்றவை) நீக்குவதால் இரவு நன்றாகத் தூங்க முடியும்.
- சுத்தமான உறங்கும் சூழலைப் பராமரித்தல்: குறிப்பிட்ட கால இடைவெளியில் தரைவிரிப்புகள் மற்றும் தூசி படிந்துள்ள இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்க படுக்கையறையில் தேவையற்ற பொருட்களைக் குவித்து வைக்கக் கூடாது.
- உறங்கச் செல்வதற்கு முன் குளித்தல்: படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிப்பதால், உங்கள் தோல் அல்லது கூந்தலில் உள்ள அலர்ஜி ஏற்படுத்தும் காரணிகளை நீக்கி, தூங்கும் போது அல்ர்ஜிக்கான அறிகுறிகளைத் தடுக்க உதவியாக இருக்கும்.
- ஆவி பிடித்தல்: ஆவி பிடிப்பதால் மூக்கடைப்பு நீங்கி, சுவாசப்பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைந்து நல்ல தூக்கம் வர உதவியாக இருக்கும்.
- ஏர் பியூரிஃபையர்கள் மற்றும் ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துதல்: ஏர் பியூரிஃபையர்கள் காற்றில் இருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகளை அகற்ற உதவும், அதே நேரத்தில் ஈரப்பதமூட்டிகள் காற்றை ஈரப்பதமாக வைத்திருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுவதைக் குறைக்கும்.
- அலர்ஜியை ஏற்படுத்தும் காரணிகளைத் தவிர்ப்பது: பருவகாலத்திற்கு ஏற்ப காற்றில் இருக்கும் பூந்தாதுவின் எண்ணிக்கையைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது அதிக அலர்ஜி இருக்கும் போது மிகவும் இன்றியமையாததாகும். அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
- மருத்துவரின் ஆலோசனை: அலர்ஜியால் தூக்கம் பாதிக்கப்பட்டால், மருத்துவரின் உதவியை நாடுவது சிறந்தது. அல்ர்ஜிக்கான சிறப்பு மருத்துவர் உங்களுடைய உடல்நிலையை பரிசோதித்து, அலர்ஜி மருந்துகள், நோயெதிர்ப்பு சிகிச்சை அல்லது பிற பொருத்தமான மேலாண்மை உத்திகள் போன்ற தனிப்பட்ட சிகிச்சையை அளிப்பார்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- நீண்ட காலமாகக் கண்டறியப்படாத அலர்ஜி பிரச்சனைகள் உங்களுடைய தூக்கத்தைச் சீர்குலைத்து, தூக்கக் கோளாறுகளுக்கு ஆளாக்குகிறது.
- அலர்ஜியின் காரணமாக போதிய தூக்கமின்மையால் ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம், இதனால் கவனக்குறைவு, பகல் நேர தூக்கம் மற்றும் உற்பத்தித்திறன் குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். கூடுதலாக, அல்ர்ஜி பிரச்சனையால் ஏற்கனவே இருக்கும் தூக்கக் கோளாறுகள் அதிகரிக்கலாம்.
- படுக்கையறையில் அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்களைத் தடுப்பது, உறங்கச் செல்வதற்கு முன் குளிப்பது மற்றும் ஆவி பிடிப்பது போன்ற அன்றாட நடவடிக்கைகள் அலர்ஜியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, மேலும் இது ஒருவர் நன்றாகத் தூங்கவும் உதவியாக இருக்கின்றன.