தும்மினால் கிடைக்கும் நிம்மதியே தனி. ஆனால் பிறர் இருக்கும்போது தும்மலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒருவித இக்கட்டான நிலை பலருக்கும் அடிக்கடி ஏற்படுகிறது. தும்மலின் செயலைப் போலவே அதைக் கட்டுப்படுத்துவதற்கான தூண்டுதல் இயற்கையானதுதான் – மேலும் கோவிட் தொற்றுநோய் தாக்கியதிலிருந்து இன்னும் இது பரவலாகிவிட்டது. இருப்பினும், தும்மலை வலுக்கட்டாயமாகத் தடுப்பதால் உடலில் ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன. நிலையான, கட்டுப்பாடற்ற தும்மலானது ஒவ்வாமை நாசியழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
தும்மலை ஏன் கட்டுப்படுத்தக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
தும்மல் என்பது வெளியில் இருந்து மூக்கில் ஊடுருவும் எரிச்சலூட்டும் துகள்களுக்கு எதிராக அதை வெளியேற்றும் நோக்கத்துடன் உடலின் ஒரு பிரதிபலிப்பு நடவடிக்கையாகும். ஆனால் இது பொதுவான ஒவ்வாமை நாசியழற்சியின் அடிப்படை நிலையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அமெரிக்க அரசாங்கத்தின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, ஒவ்வாமை நாசியழற்சி நோயானது மூக்கைப் பாதிக்கும் அறிகுறிகளுடன் தொடர்புடையதாகும். அடிக்கடி தும்முவது அத்தகைய அறிகுறிகளில் ஒன்றாகும். ஒவ்வாமையை உண்டாக்கும் பொருள் சுவாசத்தின் போது உள்ளே செல்வதால் இது நிகழ்கிறது.
தும்மல் எப்படி வருகிறது?
“மூக்கிற்குள் டர்பைனேட்டுகள் எனப்படும் சிறிய கட்டமைப்புகள் உள்ளன” என்று பெங்களூரு BGS Gleneagles Global Hospitals இன் தலைமை ENT & எண்டோஸ்கோபிக் ஸ்கல் பேஸ் சர்ஜன் டாக்டர் பிரசாந்த் ரெட்டி ஹேப்பியஸ்ட் ஹெல்த்திடம் கூறுகிறார். “மூக்கின் முன் முனையின் கீழ் இருக்கும் டர்பைனேட் மிகவும் உணர்திறன் கொண்டது. எனவே, எரிச்சலூட்டும் துகள் அதை எதிர்கொள்ளும் போதும், அது தும்மளைத் தூண்டுகிறது. எந்த வகையான துகளோ எரிச்சலூட்டும் பொருளோ நமது காற்றுப்பாதையில் நுழைவதைத் தடுப்பதற்காக உடளில் ஏற்படும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
ஹரியானாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் மற்றும் HOD டாக்டர் அருணேஷ் குமார் கூறுகிறார், “ஒரு விதத்தில் தும்மல் ஒரு பாதுகாப்பு வழிமுறையாகும். உங்கள் உடலின் எதிர்வினை (தும்மல்) அதிகமாக இருக்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது. உங்களுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த காற்றுப்பாதைகள் இருந்தால், உங்களுக்குத் தும்மல் அதிகமாகிவிடும். இதனால் நீங்கள் அடிக்கடி தும்முவீர்கள்.
ஏன் சிலர் தொடர்ந்து தும்முகிறார்கள்?
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த 47 வயதான பிஹு நடனக் கலைஞர் மௌசுமி பதக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வாமையால் அவதிப்பட்டு வருகிறார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரைத் தொடர்ந்து தும்முபவர் என்று அறிவார்கள். இதுவரை அவருக்கு தூசிகள் மற்றும் மகரந்தம் உட்பட சுமார் 35 விஷயங்களுக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பருவகால மாற்றங்களின் போது அவரது ஒவ்வாமை உச்சத்தை அடைகிறது.
“இந்த தூண்டுதல்கள் என்னை நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் தும்ம வைக்கின்றன,” என்று பதக் கூறுகிறார். “எனக்கு கண்கள் வீங்கி, நீர் வடிந்து மிகவும் சோர்வாக இருக்கும் நிலையம் ஏற்படுகிறது. எனவே, தொடர்ந்து தும்மல் தூண்டப்பட்டால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வாமை மாத்திரைகளை நான் எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.
டாக்டர் குமார் கூறுகையில், ஒன்று அல்லது இரண்டு முறை தும்மல் வருவது இயல்பானது, ஆனால் மீண்டும் மீண்டும் வருவது ஒவ்வாமை நாசியழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். “அதிகப்படியான தும்மல் சோர்வைக் கொடுக்கக் கூடியதாக இருப்பதால் சில ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளைப் பெற ஒரு மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் தும்மல் உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது, ”என்று அவர் கூறுகிறார்.
டாக்டர் ரெட்டி கூறுகிறார், “ஒவ்வாமை ஏற்படுத்தும் விஷயம் மூக்குள் சென்றால் எரிச்சலை ஏற்படுத்தி ஹிஸ்டமைன் வெளியிடுவதற்கான சிக்னலைக் கொடுக்கிறது. மூக்கின் உள்ளே உண்மையிலேயே எரிச்சலைத் தூண்டும் துகள் இல்லாவிட்டாலும், ஒவ்வாமை இருக்கும்பட்சத்தில் பலருக்குத் தொடர்ந்து தும்மல் வரலாம்.
டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க மருத்துவத்தின் மூத்த இயக்குனர் டாக்டர் இந்தர் மோகன் சுக் கூறுகையில், ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கான மூலத்தைத் தவிர்ப்பது ஒவ்வாமை நாசியழற்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த வழியாகும்.
சிலர் ஏன் மற்றவர்களை விட சத்தமாக தும்முகிறார்கள்?
டாக்டர் ரெட்டி, “நல்ல உடல்வாகு உள்ள ஆண்கள் பொதுவாக அதிக நுரையீரல் திறன் கொண்டிருப்பதன் காரணமாக சத்தமாக தும்முவார்கள், அதனால்தான் அவர்களின் தும்மலின் சத்தம் அதிகமாக இருக்கும்.
ஒரு நபரின் எடை, உடல் வளர்ச்சி, வாய் மற்றும் கழுத்தின் அளவு ஆகியவை அவர் தும்மலின் அளவை தீர்மானிக்கிறது என்று டாக்டர் குமார் கூறுகிறார். “குழந்தை பருவத்திலிருந்தே பலரும் தும்மல் முறையை வளர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, மேற்கத்திய சமூகங்கள் மிகவும் அமைதியாக தும்முவதை ஊக்குவிக்கின்றன. ஆனால் தும்மல் முடிந்தவரை இயல்பாகவே இருக்கட்டும் என்பதே எனது அறிவுரையாக இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
தும்மலை ஏன் கட்டுப்படுத்தக் கூடாது?
2019-ஆம் ஆண்டில் தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ரைனாலஜி & அலர்ஜியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, தும்மலின் போது உருவாகும் வழக்கமான அழுத்தம் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் ஒருவர் தும்மலை அடக்கினால், அந்த அழுத்தம் சாதாரணமாக இருப்பதை விட ஐந்திலிருந்து 24 மடங்கு அதிகமாகும். தும்மலை அடக்கக்கூடாது என்பதற்கு இதுவே முதன்மைக் காரணம். அதிகரித்த நுரையீரல் அளவு மற்றும் அழுத்தம் காரணமாக ஆண்கள் தும்மினால் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கருதப்படுகிறது.
“நீங்கள் தும்மலைக் கட்டுப்படுத்த முயற்சித்தால், தீங்கு விளைவிக்கும் துகள் உங்கள் உடலுக்குள் அப்படியே இருக்கும், இது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்” என்று டாக்டர் குமார் கூறுகிறார்.
டாக்டர் ரெட்டி கூறுகிறார், “நீங்கள் தும்மலை அடக்கும்போது, மூக்கின் வழியாக வெளியேறும் உயர் அழுத்த காற்றை உங்கள் காதுக்கு செலுத்துகிறீர்கள், இது செவிப்பறை பாதிப்பை ஏற்படுத்தும். தும்மலைக் கட்டுப்படுத்துவது ஒருபோதும் அறிவுறுத்தப்படுவதில்லை
எப்போது தும்மலைக் கட்டுப்படுத்த வேண்டும்?
தும்மும்போது ஒரு உறுப்பு அல்லது சில திசுக்கள் அடிவயிற்றில் உள்ள தசைகள் அல்லது திசுக்களின் பலவீனமான அடுக்குகளின் வழியாகக் காற்றைத் தள்ளினால், அது வயிற்றுக் குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பலவீனமான வயிற்று தசைகள் மேலும் கஷ்டப்படக்கூடாது. தும்மல் அடிவயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனெனில் அவை [வயிற்று தசைகள்] தும்மலின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
“நீங்கள் உள்ளிழுக்கும்போது, வயிறு தட்டையாகவும் பெரியதாகவும் மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள்” என்கிறார் டாக்டர் ரெட்டி. “டயஃப்ரம் அடிவயிற்றைக் கீழே தள்ளும் என்பதால்தான். ஆனால் உள்ளிழுக்கும் காற்றின் அளவை வெளியே எடுக்க நீங்கள் மூச்சை வெளியேற்றும்போது, நுரையீரல் உள்ளளவு சுருக்கப்பட்டு, அந்தக் காற்றை வெளியே தள்ள வயிற்றுத் தசைகளால் டயஃப்ரம் மேலே தள்ளப்படும். எனவே, யாராவது தும்மும்போது, வயிற்றுத் தசைகள் மற்றும் டயஃப்ரம் ஒரே நேரத்தில் சுருங்கி அந்த அளவு காற்றை வேகமாக வெளியேற்றும்.
டாக்டர் குமார் கூறுகையில், தும்மல் என்பது மார்புச் சுவர்கள், கழுத்து, முகம் மற்றும் வயிறு ஆகியவற்றின் தசைகளை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். “இவை அனைத்தும் தும்மல் ஏற்படுவதற்கு இணைந்து செயல்படுகின்றன,” என்று அவர் கூறுகிறார். “ஒருவருக்கு அடிவயிற்று குடலிறக்கம் இருந்தால், அடிவயிற்றில் அதிகரித்த அழுத்தம் காரணமாக ஒருவர் தும்மும்போது அது உங்கள் வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். தொடர்ந்து தும்முவதால் குடலிறக்கம் இன்னும் மோசமாகும்.”
தெரிந்துகொள்ள வேண்டியவை
தும்மல் என்பது வெளியில் உள்ள எரிச்சலூட்டும் ஏதேனும் துகள் வெளியேற்றப்படுவதற்காக உடலில் ஏற்படும் இயற்கையான பாதுகாப்புச் செயல்முறையாகும். இருப்பினும், மீண்டும் மீண்டும் தும்மல் வருவது ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம். தும்மலைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்தினாலும், குடலிறக்கம் உள்ளவர்கள் போன்ற, வயிற்றுத் தசைகள் கஷ்டப்படக் கூடாத சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு, தும்மல் தீங்கு விளைவிக்கும்.