செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் எல்.இ.டி., பல்புகள் ஆகியவற்றிலிருந்து வரும் புளூ லைட்தான் இதற்கான காரணம் என்ற கருத்து நிலவுகிறது. இது நம் கண்களை எவ்வாறு பாதிக்குமா? ப்ளூ லைட் உண்மையிலேயே ஆபத்தானதா? இதை தடுக்கும் கண்ணாடிகள் அணிவதால் நம் கண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்பது குறித்து புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியின் கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீபால் விளக்கினார். அது பற்றி இக்கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
‘Blue light’ என்றால் என்ன?
முதலில் புளூ லைட் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். நீல ஒளி என்பது கண்களுக்கு புலப்படும் ஒளி நிறமாலையின் குறுகிய அலைநீளமும், அதிக ஆற்றல் உடைய ஒரு நிறம். இது இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்தும் வெளிப்படுகிறது.
அவை தவிர ப்ளோரசன்ட் லைட், எல்.இ.டி டிவிகள், கம்ப்யூட்டர் மானிட்டர்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் திரைகள் போன்ற செயற்கை கருவிகளிலும் காணப்படுகிறது.
நீல ஒளி கண்களுக்கு என்ன செய்யும்?
“நமது கண் சில வகையான ஒளியிலிருந்து பாதுகாக்கும் கட்டமைப்புகளுடன் உள்ளது. கண்ணின் கார்னியா மற்றும் லென்ஸ் கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒளி உணர்திறன் உடைய விழித்திரையை புற ஊதா கதிர்கள் சேதப்படுத்தாத வகையில் பாதுகாக்கிறது.” என மருத்துவர் ஸ்ரீபால் கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்தார். “அந்த கட்டமைப்புகள் நீல ஒளியை தடுத்து நிறுத்தாது. சூரியனில் இருந்து வரும் இயற்கையான நீல ஒளி எந்த ஒரு சாதனத்திலிருந்தும் அளவை விட அதிகமாக உள்ளது.
ஆனாலும் டிஜிட்டல் திரைகள் மற்றும் சாதனங்களில் இருந்து வரும் நீல ஒளியை அதிகம் பார்ப்பது கவலைக்குரிய ஒன்று. ஏனென்றால் மக்கள் செல்போன், லேப்டாப், டிவியை நெருக்கமாக வைத்துக் கொண்டு, அதனுடன் அதிக நேரம் செலவிடுவதே இதற்குக் காரணம்.
இந்திய கண் மருத்துவ இதழில் 2020ம் ஆண்டு கோவிட் சமயத்தில் நடந்த ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் லாக்டவுனின் போது, 32.4 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு 9 முதல் 11 மணிநேரம் நீல ஒளியை உமிழும் சாதனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
மற்றொரு 15.5 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணிநேரம் வரை சாதனங்களைப் பயன்படுத்தினர். வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சூழலும் இந்த ஸ்க்ரீன் டைம் அதிகரிக்க காரணம்.
விலங்குகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீல ஒளி ரெட்டினா எனும் விழித்திரையில் உள்ள செல்களை சேதப்படுத்தும் என காட்டுகின்றன. நீல ஒளி மனித கண்ணின் விழித்திரையை சேதப்படுத்தும் என்பதற்கு சிறிய அளவிலான ஆதாரங்களே உள்ளன.” என்று கூறினார்.
மேலும், டிஜிட்டல் திரையை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பதால் பல விதமான கண் பாதிப்புகள் வருவதாக டாக்டர் ஸ்ரீபால் கூறுகிறார்.
- கண்ணில் நீர் வடிதல்
- கண்கள் வறட்சி அடைதல்
- கண்களில் அரிப்பு
- கண்களில் எரிச்சல்
- தலைவலி
- மங்கலான பார்வை
- கண்களை திறந்து வைக்க சிரமப்படுதல்
இது போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கிறார்.
நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள்
செல்போன், எல்.இ.டி., டிவி, லேப்டாப் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் நீல ஒளி, விழித்திரை செல்களை சேதப்படுத்தும் என்ற அச்சம் காரணமாக, நீல ஒளியை தடுக்கும் வகையிலான கண்ணாடிகள் என்ற பெயரில் பல நிறுவனங்கள் பிரத்யேக கண்ணாடிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதை மருத்துவர்கள் பரிந்துரையின்றியே பலரும் வாங்குகின்றனர்.
புளூ லைட் கண்ணாடிகள் இந்த அறிகுறிகளிலிருந்து நம்மை பாதுகாக்குமா என்று மருத்துவர் ஸ்ரீபாலிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது,
“ஏற்கனவே கூறியது போல், செயற்கை நீல ஒளி விழித்திரை செல்களை பாதிக்கும் என்பதற்கு வலுவான ஆராய்ச்சி சான்றுகள் இல்லை. சிலருக்கு நீல ஒளியை நீண்ட நேரம் பார்ப்பதால், சர்காடியன் ரிதம் எனும் தூக்க சுழற்சி மாறுபடும்.
தொடர்ந்து பல மணிநேரம் செல்போன், கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்ப்பதால் வரும் தொடர் தலைவலிக்கு புளூ லைட் பொதுவாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இருப்பினும், தலைவலி என்பது சி.வி.எஸ். எனும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் அல்லது டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் ஆகியவற்றால் உண்டாகும் அறிகுறி மட்டுமே. சி.வி.எஸ்.,ன் அறிகுறிகளில் தலைவலி மட்டுமின்றி, நீர் கோர்த்த கண்கள், வறண்ட கண்கள், ஒளியினால் சென்சிட்டிவிட்டி கூடுவது, மற்றும் மங்கலான பார்வை ஆகியவை அடங்கும்.
திரையின் ஒளிர்வு, உங்களுக்கும் உங்கள் திரைக்கும் இடையே உள்ள தூரம் மற்றும் போதுமான இடைவெளிகளை எடுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, , இந்த கண் அசவுகரியம் நேரடியாக நீல ஒளியினால் ஏற்படுவதில்லை.” என்று விளக்கினார்.
நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள் தேவையற்றவை
நீல ஒளியை தடுக்கும் கண்ணாடிகளால் பயன் கிடைக்குமா என்பது பற்றி கேட்டதற்கு மருத்துவர் ஸ்ரீபால் கூறிய பதில், “நீல ஒளியை தடுக்கும் கண்ணாடிகள் வெளியிடங்களில் கேட்ஜெட்களை தெளிவாக பயன்படுத்த உதவும். மற்றபடி அவை கண்ணை பாதுகாக்கும் என்பதற்கு எந்த ஆதராமும் இல்லை என்பதே உண்மை. நீல ஒளி தடுப்பு கண்ணாடிகள் தூக்கத்தின் தரம் அல்லது கண் அழுத்தத்தையோ சரிப்படுத்தாது என மேயோ கிளினிக்கின் ஆராய்ச்சி கூறுகிறது. அதே போல் அமெரிக்க கண் மருத்துவ அகாடமியும் நீல ஒளி தடுப்பு கண்ணாடிகளை பரிந்துரைப்பதில்லை.” என்றார்.
எனவே, செல்போன்,கம்ப்யூட்டர்,டேபிலேட்ஸ் போன்ற சாதனங்களை அளவாக பயன்படுத்துவதும், கண்களிலிருந்து சற்று தொலைவாக வைத்து பார்ப்பதும், அடிக்கடி கண்களை டிஜிட்டல் திரைகளில் இருந்து விலக்கி தொலைவாக பார்ப்பதும் தான் நம்மை கண்ணை பாதுகாத்துக் கொள்ள உதவும்.