சோர்வுற்ற முகம், குழி விழுந்த கண்கள் மற்றும் உங்கள் கண்களுக்குக் கீழே கரு வளையங்கள் இருப்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது கவலைப்படுவதுண்டா? கரு வளையங்கள் எனப்படும் நிறமாற்றம் அடைந்த தோலின் அந்தத் திட்டுகள் பாதிப்பில்லாதவையாகத் தோன்றலாம், ஆனால் அது உளவியல் ரீதியாக உங்களைப் பாதிக்கலாம்.
“எப்போதெல்லாம் ஹீமோகுளோபின் அளவு எதிர்பார்த்த அளவிலிருந்து குறைகிறதோ, உடலில் உள்ள திசுக்களின் செயல்பாடு குறைகின்றன. கண் இமைகளுக்குக் கீழே உள்ள நுண்ணிய இழைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுவதால், இப்படி நடக்கும் பட்சத்தில் அவை பொதுவாக பாதிக்கப்படுகின்றன. லேசானது முதல் மிதமான இரத்த சோகை இருந்தால் கருவளையங்கள் வருகின்றன,” என்று சென்னையில் உள்ள ‘டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில்’ கண் மருத்துவராக உள்ள டாக்டர் ராஜேஸ்வரி M தெரிவிக்கிறார்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் நேரடியாக இருக்க நேர்ந்தால் சருமத்தில் மெலனின் அதிகமாக உற்பத்தியாகிறது. அதிகரித்த மெலனின் படிவுகளாலும் இரத்த ஓட்டம் குறைவதாலும் கண்களைச் சுற்றியுள்ள தோல் கருமையாகிறது. இருப்பினும், தனிநபர் அனுபவிக்கும் உடல் மற்றும் மன அழுத்தத்தைப் பொறுத்து அதன் அளவு மாறுபடும்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த 42 வயதான ஐடி ஊழியர் வனிதா P, வேலை செய்யும் இடத்தில் நீண்ட நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்துவதால் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் வருகிறது என்கிறார். லேப்டாப்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதால், தீங்கு விளைவிக்கும் நீல ஒளியின் காரணமாக கண்களுக்கு அழுத்தம் ஏற்படும் என்கிறார்.
பிக்மென்ட் டிஸார்டர்ஸ் சொசைட்டியின் அதிகாரப்பூர்வ வெளியீடான பிக்மென்ட் இன்டர்நேஷனலில் வெளியிடப்பட்ட 2018-ம் ஆண்டு ஆய்வில், தொலைக்காட்சி பார்ப்பது அல்லது நீண்ட நேரம் மொபைலைப் பயன்படுத்துவது மற்றும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது போன்றவற்றால் கண்களுக்கு போதுமான ஓய்வு கிடைப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. சோர்வுற்ற கண் தசைகள் கரு வளையங்கள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
புகையிலைப் புகையில் உள்ள நச்சுகள் கண்களைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களைச் சேதப்படுத்துகின்றன. இது சிறிய இரத்த நாளங்களையும் அழிக்கிறது, இது இறுதியில் கரு வளையங்கள் உருவாக வழிவகுக்கிறது.
ஒருங்கிணைந்த மருத்துவம் மூலம் கரு வளையங்களைச் சமாளித்தல்
கோயம்புத்தூர் மாருதி சித்தா கிளினிக்கின் சித்த நிபுணர் டாக்டர் K அன்பரசன், கருவளையங்களைப் போக்க கீழ்க்கண்ட ஆலோசனைகளை கூறுகிறார்:
ஜிஜிபஸ் (இந்திய ஜூஜூப்), வைட்டமின் A, B1, B2 மற்றும் C மற்றும் இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல தாதுக்களைக் கொண்ட ஒரு பருவகாலப் பழம் ஆகும். இது குறிப்பாக கரு வளையங்களைச் சமாளிக்கப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது இறந்த சரும செல்களை அகற்றவும் புதிய தோல் செல்களை உருவாக்கவும் உதவுகிறது. கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமின்றி, செரிமானத்திற்கும் இது உதவுகிறது.
- இஞ்சி டீ, லெமன் டீ, நெல்லிக்காய் ஜூஸ், எலுமிச்சை சாறு, பப்பாளி ஆகியவை ரத்த தேக்கத்தை தடுக்கவும், நம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. அவற்றில் வைட்டமின்கள் A, B மற்றும் C உள்ளன, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் இறுதியில் கருவளையங்களைக் குறைக்கிறது.
- தக்காளிச் சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை 25 முதல் 30 நாட்களுக்கு தடவி வந்தால் கருவளையம் குறையும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை உலர வைத்துக் கழுவவும். இது தூக்கமின்மை மற்றும் நீண்ட கால நேரடி சூரிய ஒளியின் காரணமாக முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கிறது.
- துருவிய வெள்ளரிக்காயை 20-25 நாட்களுக்கு மாலையில் ஒரு முறை தடவி வந்தால் (10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்), புகைபிடிப்பதை விட்டுவிட்டவர்களாக இருந்தாலும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் குறைகிறது. ஆனால் புகையிலையின் புகையால் உண்டான கருவளையம் அப்படியே இருக்கலாம்.
- உருளைக்கிழங்கு சாறு குளிரூட்டியாக செயல்படுகிறது; இது கண்களைச் சுற்றி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு முறை முகத்தில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர வைத்து கழுவவும். உருளைக்கிழங்கில் உள்ள மூலப்பொருள் செரோடோனினைச் சுரக்கச் செய்து தூக்கத்தைத் தூண்டுகிறது. எனவே, மன அழுத்தம் காரணமாக தூக்கம் இல்லாத நபர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
- மஞ்சள் கலந்த தயிரை மாதம் ஒருமுறை தடவினால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால் கருவளையங்கள் மெதுவாக குறையும். கண்களுக்கு அருகில் தடவி 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும். தயிரில் இருக்கும் கொழுப்பானது மஞ்சளுடன் இணைந்து சருமத்தின் தோல் மற்றும் மேல்தோல் அடுக்குகளால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
தமிழகத்தின், பொள்ளாச்சியைச் சேர்ந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர் கலைகீர்த்தி J கூறுகையில், “மனமும் உடலும் ஒன்றையொன்று சார்ந்துள்ளது. தூக்கமின்மையால் ஏற்படும் எந்த மன உளைச்சலும் கரு வளையங்கள் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. கண்களைக் கழுவும் பயிற்சி கண்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும்.
ஒரு அகலமான கிண்ணத்தில் சுத்தமான நீரை ஊற்றிக் கொள்ளவும். கிண்ணத்தை இடுப்பு உயரத்தில் உங்கள் முன் வைக்கவும். மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் நாக்கை வெளியே வைத்து, கிண்ணத்தை நோக்கி மெதுவாக வளைக்கவும். நீர் நெற்றி முதல் கன்னம் வரை இருக்க வேண்டும். கண்கள், மூக்கு மற்றும் வாய் மூன்று முதல் ஐந்து வினாடிகள் தண்ணீருக்குள் இருக்க வேண்டும், ஆனால் காதுகள் உள்ளே இருக்க வேண்டியதில்லை. ஐந்து வினாடிகளுக்குப் பிறகு ஓய்வெடுத்து, நாக்கை ஓய்வு நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
அவர் மேலும் கூறும்போது, “சீனப் பாரம்பரிய அணுகுமுறையில் உற்று நோக்கும் உடற்பயிற்சி உள்ளது. அதைச் செய்தால் கண்களுக்கு மீண்டும் ஆற்றல் கிடைக்கும். சூரிய ஒளியை அதிகாலையில் 10 நிமிடங்களுக்குப் பார்ப்பது கண்களின் நரம்புகளை புதுப்பிக்க உதவுகிறது. கண்கள் ஓய்வெடுக்க, 10 நிமிடங்கள் முழு இருளில் பார்க்கவும். இது கண்களைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.