சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நான்ஸ்டிக் கிட்சன் பாத்திரங்களில் உள்ள ‘அழிக்க முடியாத ரசாயனங்கள்’ புற்றுநோயை உண்டாக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரசாயனங்கள் உலகளவில் புற்றுநோய் மூலம் ஏற்படும் மரணங்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது. துரதிஷ்டவசமாக, உற்பத்தித் துறையில் இந்த ரசாயனகளின் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல நாடுகளில் கடுமையான சட்டமோ ஒழுங்குமமுறைகளோ இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நான்ஸ்டிக் கிட்சன் பாத்திரங்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா?
2022-இல், லாஸ்-ஏஞ்சலிஸ் மற்றும் ஹவாயில் வாழும் பல்வேறு இன மக்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் ஆய்வு அறிக்கைகள் JHEP ரிபோர்ட்ஸில் வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி PFAS எனப்படும் ரசாயனங்களை அதிகம் எதிர்கொள்ள நேரும்போது ஹெபாட்டோ செல்லுலார் கார்சினோமா என்று அழைக்கப்படும் புற்றுநோய் பாதிப்பு (ஒரு வகையான கல்லீரல் புற்றுநோய்) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டது. “புற்றுநோய் இல்லாத முதியவர்களிடமிருந்து ரத்த மாதிரிகளைச் சேகரித்தோம். அதன்பிறகு, அவர்களுக்குத் தங்கள் வாழ்வின் பின்னாளில் புற்றுநோய் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணித்தோம். அவர்களின் இரத்தத்தில் உள்ள PFAS அளவை நாங்கள் கணக்கிட்டோம். அதிக அளவு PFAS ஹெபடோசெல்லுலர் கார்சினோமா (HCC) அபாயத்தை ஏற்படுத்துகிறதா என்பதைப் பார்த்தோம். PFAS ரசாயனங்களை அதிகம் எதிர்கொள்ள நேர்ந்தால் மிகவும் பொதுவான புற்றுநோயான கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்தோம்” என்று இந்த ஆய்வைத் தலைமையேற்று நடத்திய விரிவுரையாளரான ஜெஸ்சி A குட்ரிச் ஹேப்பியஸ்ட் ஹெல்த்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.
மேலும், பேராசிரியர் குட்ரிச் (மக்கள்தொகை மற்றும் பொது சுகாதார அறிவியல் துறை, கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசின், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸின் உதவி பேராசிரியர்) கூறுகையில் , ஆய்வில் பங்கேற்றவர்கள் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் முன் PFAS ரசாயனங்களுக்கு உட்படுத்தப்பட்டனர். எனவே PFAS அதை ஏற்படுத்தியிருக்க அதிக வாய்ப்புள்ளது.
PFAS கல்லீரல் புற்றுநோயை உண்டாக்குமா?
PFAS (பெர்-அண்டு பாலிஃபுளூரோஆல்கைல் சப்ஸ்டன்ட்ஸ்கள்) என்பவை பொதுவானதாக இருக்கும் ஒரு நிலையான மாசுபடுத்திகள் ஆகும். PFAS ரசாயனங்கள் இயற்கையாகவே சிதைக்க முடியாத ரசாயனம் என்பதால் இதை ‘நிரந்தரமாகத் தாங்கும் ரசாயனங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. அது இத்தகைய தன்மையைக் கொண்டிருப்பதால் அது உடலுள் சென்றுவிட்டால் அது பல ஆண்டுகள் அப்படியே உடலில் இருக்கக்கூடும். PFAS ரசாயனங்கள் நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பலவற்றிலும் இருக்கிறது. உதாரணமாக, நான்ஸ்டிக் கடாய், ரெயின்கோட், ஜிம் உபகரணங்கள், உணவு பேக்கேஜிங் போன்றவற்றைச் சொல்லலாம். சில மேக்-அப் பொருட்களில்கூட அது இருக்கிறது. நிலத்தடி நீரில் ஏற்படும் மாசின் காரணமாக குடிநீரிலும் சில சமயம் கலந்து விடுகிறது.
புது தில்லியில் உள்ள சாகேத்தில் அமைந்திருக்கும் மேக்ஸ் மருத்துவமனையில், புற்றுநோயியல்/கதிரியக்க புற்றுநோயியல் இணை இயக்குநராக உள்ள டாக்டர் டோடுல் மோண்டல் கூறுகையில், இவை நீடித்து நிலைத்திருக்கும் வகையிலான ரசாயனப் பிணைப்பைக் கொண்டிருப்பதால்தான் இந்தத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறுகிறார். “நான்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு தயாரிக்கும்போது அதிலுள்ள இந்த ரசாயனம் அந்த உணவில் கலந்து அது எளிதில் உடலுக்குள் நுழைகின்றன. பொதுவாக, எந்தவொரு இரசாயனப் பொருளும் டிஎன்ஏவை (DNA) சேதப்படுத்துவதன் மூலம் சாதாரண செல்லைப் புற்றுநோய் செல்லாக மாற்றும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியால் அந்தச் சேதமடைந்த டிஎன்ஏவை அகற்ற முடியாவிட்டால், அது நம் உடலில் நீண்ட காலம் நீடிக்க நேரும். பின்னாளில் அது புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது, ”என்று அவர் கூறுகிறார்.
நிரந்தரமாக இருக்கும் ரசாயனத்தின் ஆபத்து என்ன?
PFAS என்பது நாளமில்லா சுரப்பியைச் சீர்குலைக்கும் இரசாயனங்கள் என்றும் அறியப்படுகிறது, அதாவது அவை ஹார்மோன்களின் செயல்பாட்டில் குறுக்கிட்டு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். “இந்த ரசாயனங்கள் கல்லீரலில் படிந்து, அதில் படிப்படியாக கொழுப்பு மாற்றங்களை ஏற்படுத்தும். இது நீண்ட காலம் நிகழும்போது, அது படிப்படியாக சிரோசிஸுக்கு (cirrhosis – சிரோசிஸ் என்பது உங்கள் கல்லீரல் நிரந்தரமாக சேதமடைந்த ஒரு நிலை) வழிவகுக்கும், பின்னர் இது கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும், ”என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) காரணமாக புற்றுநோய் உண்டாவதுடன் ஒப்பிடும்போது ரசாயனங்களால் ஏற்படுவது மிகவும் குறைவுதான் என்று விஜயவாடாவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் மூத்த கல்லீரல் நிபுணர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், தெற்காசிய கல்லீரல் நிறுவனத்தின் நிறுவனர் பேராசிரியர் டாக்டர் டாம் செரியன் கூறுகிறார். “கொழுப்பு என்பது எந்த ஒரு பாதிப்பாக இருந்தாலும் அதற்குக் குறியீடாக இருக்கும். இது பொதுவானது. கொழுப்புக் கல்லீரல், மதுவால் ஏற்படும் சேதமாகக்கூட இருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
நான்ஸ்டிக் சமையலறைப் பாத்திரங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை நிறுவுவதற்கு கூடுதல் ஆதாரங்கள் மற்றும் தரவுகள் தேவை என்று டாக்டர் மோண்டல் கூறுகிறார். WHO அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் IARC (புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம்) போன்ற சில சர்வதேச நிறுவனங்கள், மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்களைக் கண்டறிய பல தொற்றுநோயியல் ஆய்வுகளை நடத்துகின்றன. “ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த இரசாயனம் மற்றும் மனித புற்றுநோய் தொடர்பாக வலுவான தரவுகள் சில ஆய்வுகள் மூலம் கிடைத்தாலும் அவை போதுமானதாக இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
இந்த இரசாயனங்கள் பொதுவாக டெஸ்டிகுலர் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார். “அவை கர்ப்பப்பை, தைராய்டு மற்றும் ஹாட்கின் அல்லாத லிம்ஃபோமா (லிம்ஃபேட்டிக் சிஸ்டத்தில் தொடங்கும் ஒரு புற்றுநோய்) ஆகியவற்றிலும் புற்றுநோயை உண்டாக்கலாம்.
விரிவுரையாளர் குட்ரிச் தனது ஆய்வில், PFAS ரசாயனத்திற்கு உட்படுத்தப்பட்டால், அது மெட்டாபொலைட்ஸ் (இயற்கையாகவே ரத்தத்தில் உருவாகும் ஒரு சிறிய ரசாயனங்கள்) அளவில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கவனித்தார். ஏனெனில் அதன் அளவுகள் அதிகரிப்பது கல்லீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக முன்பு கண்டறியப்பட்டிருந்தது. “இதை கவனித்ததன் மூலம் இந்த ரசாயனங்கள் எந்த வழியில் புற்றுநோயை உண்டாக்குகின்றன என்பதைக் கண்டறிய முடிந்தது. PFAS ரசாயனங்களானது ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருப்பதுடன் தொடர்புடையதாக இருந்தது. ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருப்பது என்பதும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணியாக இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.
எனது கல்லீரல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது?
பேராசிரியர் டாக்டர் செரியன் கூறும்போது, “பாத்திரங்கள் மிகவும் தேய்ந்து போய், அவற்றில் விரிசல் ஏற்படும் போது, இந்த இரசாயனங்கள் சூடாகி வெளியேறும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சில பூசப்பட்ட பாத்திரங்களை நாம் அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது.”
இரும்பு பாத்திரங்கள், பீங்கான் அல்லது துருப்பிடிக்காத எஃகு போன்ற பழைய பாரம்பரிய பாத்திரங்களைப் பயன்படுத்த டாக்டர் மோண்டல் பரிந்துரைக்கிறார். HCC இன் அபாயத்தைக் குறைக்க உதவும் தனிப்பட்ட நடத்தைகள் அல்லது அரசாங்க ஒழுங்குமுறை மூலம் PFAS ரசாயனத்திற்கு உட்படுவதைத் தடுக்கலாம் என்று பேராசிரியர் குட்ரிச் கூறுகிறார். பெரும்பாலான நாடுகளில் உற்பத்தித் தொழிலைக் கட்டுப்படுத்த ஒரு குறிப்பிட்ட சட்டம் இருக்க வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் இந்த இரசாயனங்கள் சேர்ப்பதைத் தெரிவிக்கக்கூட அவசியமில்லை என்பதே தற்போதைய நிலவரம் என்றும் டாக்டர் மோண்டல் கூறுகிறார்.
PFASக்கு உட்படுவதைக் குறைப்பதைத் தவிர, வழக்கமான உடற்பயிற்சிகளுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், புகைபிடித்தல், ஆல்கஹால் மற்றும் தேவையற்ற உணவைத் தவிர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும் உதவும்.
தெரிந்துகொள்ள வேண்டியவை:
நான்-ஸ்டிக் சமையலறை பாத்திரங்களில் காணப்படும் PFAS போன்ற நிரந்தர இரசாயனங்கள் கல்லீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதாகும்.
நிலத்தடி நீர் மாசுபாட்டின் காரணமாக நான்-ஸ்டிக் பான்கள், ரெயின்கோட்கள், ஜிம் உபகரணங்கள், உணவு பேக்கேஜிங் மற்றும் சில ஒப்பனை மற்றும் குடிநீர் போன்ற பல பொதுவான வீட்டுப் பொருட்களில் PFAS காணப்படுகிறது.
இரசாயனங்கள் டிஎன்ஏவை சேதப்படுத்தும் மற்றும் ஹார்மோன் செயல்பாட்டில் குறுக்கிடக்கூடும், இதனால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.
அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாகவும், கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை உயர்த்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் PFASக்கு உட்படுவதைக் குறைத்தல், துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துதல் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுதல் ஆகியவை அடங்கும்.