அவ்வப்போது தனிச்சையாக வரும் இந்தக் கொட்டாவியைச் சோர்வு அல்லது சலிப்பு காரணமாகப் பொதுவாக வருவது மட்டுமே என்று கருதி யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அத்துடன் அது ஒருவருக்கு வந்தால் அருகில் உள்ள மற்றவர்களுக்குப் பரவக் கூடியதாகவும் உள்ளது. எனினும், ஏன் வருகிறது என்று அறியப்படாத இந்தக் கொட்டாவியானது நம் உடல் ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வு தொடர்பான நிலையை அடையாளம் காட்டுவதாகவும் உள்ளது. அதாவது அது நம் உடல்நிலை குறித்து அறியாத சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதாக இருக்கலாம்.
அடிக்கடி கொட்டாவி வருவதை அடிப்படையான உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்தும் பல ஆய்வுகள் உள்ளன, இவை பெரும்பாலும் தூக்கமின்மையுடன் தொடர்புடையவை. இருப்பினும், ஸ்லீப் அண்ட் ப்ரீத்திங் என்ற இதழ் 2009 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த ஆய்வில் இரண்டு பெண்களுக்கு அடிக்கடி மற்றும் அதிகப்படியான கொட்டாவி வருவது தெர்மோர்குலேட்டரி செயலிழப்பு (உடல் அதன் உள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தத் தவறும் போது) காரணமாக கண்டறியப்பட்டது. கொட்டாவி வருவது தூக்கக் கோளாறின் அறிகுறியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இது போன்ற நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.
ஹேப்பியெஸ்ட் ஹெல்த், நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம் என்பதையும், கொட்டாவி விடுவதற்குப் பின்னால் உள்ள மறைந்துள்ள தகவல்களையும் விளக்கும் நிபுணர்களிடம் பேசியது.
நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்?
கொட்டாவி விடுதல் என்ற நிகழ்வை மதிப்பிடும் பல தியரிகள் இருந்தாலும் உடலின் வெப்பத்தை (உடலின் தெர்மோர்குலேஷன்) சீராக்க நன்றாக வாயைத் திறந்து அதிக ஆக்சிஜனை நுகர்வதுதான் கொட்டாவி எனப்படுவது என்னும் கருத்து பரவலாக உள்ள ஒன்றாகும். ஆனால் இதற்கு உறுதிப்படுத்தப்பட்ட காரணம் எதுவும் இல்லை.
“ஒரு பிரபலமான கோட்பாடு என்னவென்றால், நாம் சோர்வாக அல்லது பசியுடன் இருக்கும்போது மூளை அதிக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ள வேண்டும், இது கொட்டாவிக்கு வழிவகுக்கிறது,” என்கிறார் பெங்களூரு BGS Gleneagles Global Hospitals இன் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் சிரி M காமத்.
“உறக்கமின்மை மற்றும் அதிகப் பகல்நேர தூக்கம் போன்ற சில மருத்துவ நிலைமைகள் ஒருவர் அடிக்கடி கொட்டாவி விடுவதற்கான முக்கிய காரணங்களாகும்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“கொட்டாவியின் போது , உள்ளிழுக்கும் மூச்சு அதிகமாகவும், வெளியேற்றும் மூச்சு குறைவாகவும் இருக்கும். இது நமது உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் காதுகளில் அழுத்தத்தைப் பராமரிப்பதற்கும் உதவும்” என்று புனேவில் உள்ள அப்பல்லோ கிளினிக்கின் நுரையீரல் நிபுணர் டாக்டர் மனோஜ் பவார் கூறுகிறார். கொட்டாவி விடுவது என்பது சோர்வாக இருக்கும் போது உடல் விழிப்புடன் இருக்கச் செய்யும் ஒரு வழியாகவும் கருதப்படுகிறது” .
“கொட்டாவி உடலில் கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைக்கிறது, அதன் மூலம் ஒரு விழிப்பை ஏற்படுத்துகிறது,” என்று டாக்டர் பவார் கூறுகிறார், உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றில் அதிக இரத்த ஓட்டம் உள்ளதால் மூளையை நோக்கிச் செல்லும் ரத்தம் குறைவாக உள்ளது, அதனால்தான் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருகிறது.
கொட்டாவி ஏன் பிறரையும் தொற்றுகிறது?
கொட்டாவி என்பது ஒரு தொற்று நிகழ்வாகும், யாரோ கொட்டாவி விடுவதைப் பார்த்தால் அது பிறருக்கும் பரவும்.
“கொட்டாவியின் தொற்றுத் தன்மைக்குப் பின்னால் பல கோட்பாடுகள் இருந்தாலும், இது ஏன் நிகழ்கிறது என்பதற்கான நிரூபிக்கப்பட்ட கருத்தியல் எதுவும் இல்லை” என்கிறார் டாக்டர் காமத்.
அதிகப்படியான கொட்டாவி: அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
அதிகமாக கொட்டாவி விடுவது உடல் பருமன், நுரையீரல் நிலைகள் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் ஏற்படும் அதிகப்படியான பகல்நேர தூக்கத்தைக் குறிக்கலாம் என்கிறார் டாக்டர் காமத். “இது இந்த நிலைமைகளின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.”
“அதிகக் கொட்டாவி சில மூளை நிலைகளைக் குறிக்கலாம். இது கட்டிகள் காரணமாக மூளையின் தெர்மோர்குலேஷன் குறைபாடுகளுடன் தொடர்புடையது” என்கிறார் டாக்டர் பவார்.
ஃபிரான்டியர்ஸ் இன் நியூரோ சயின்ஸ் இதழில் 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மூளைக் காயத்துடன் தொடர்புடைய தெர்மோர்குலேட்டரி செயலிழப்பு காரணமாக பக்கவாத நோயாளிகளில் அதிகப்படியான கொட்டாவி வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “கொட்டாவி மூளையின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அதனால்தான் பலவீனமான தெர்மோர்குலேஷன் அதிகப்படியான கொட்டாவிக்கு வழிவகுக்கும்” என்று டாக்டர் பவார் விளக்குகிறார், கொட்டாவி உடலைக் குளிர்ச்சியாக்கும் செயல்முறையாகக் கருதப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
அவர் மேலும் கூறுகையில், அதிகப்படியான கொட்டாவி ஒரு அடிப்படை பிரச்சினைக்குப் பதிலாக, சில மயக்க மருந்துகளின் விளைவாகவும் இருக்கலாம். “தூக்க மாத்திரைகளின் மயக்க விளைவு 12-24 மணிநேரம் வரை நீடிக்கும், அதனால்தான் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டவருக்குப் பகலில் அதிகக் கொட்டாவி வரலாம்” என்று டாக்டர் பவார் விளக்குகிறார்.
“அதிகக் கொட்டாவி வருவது பொதுவாகவே இயல்பான ஒன்றுதான். இது தீவிரமான அடிப்படை உடல் நிலைமைகளின் முக்கிய அறிகுறியாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. அதிகப்படியான கொட்டாவிக்கும் இத்தகைய அடிப்படை நிலைமைகளுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்,” என்று டாக்டர் காமத் தெரிவிக்கிறார்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- கொட்டாவி வருவதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றாலும், ஒரு நபர் சோர்வாகவோ, சலிப்பதாகவோ உணரும் போதெல்லாம் அவரை விழிப்பூட்டும் ஒரு செயல்முறையாக இது கருதப்படுகிறது.
- தூக்கமின்மை மற்றும் அதிக பகல் தூக்கம் போன்ற சில மருத்துவ நிலைகள் கொட்டாவி வருவதற்கு காரணமாக இருக்கலாம்.
- அதிகப்படியான கொட்டாவி மற்றும் அடிப்படை சுகாதார நிலைமைகளுக்கு இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.