கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளினால் எதிர்கொள்ளும் மன அழுத்தம் மாணவர்களில் பதட்டத்தை அதிகரித்து மன ரீதியான வேறு பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கற்றுத்தர வேண்டும்.
“மன அழுத்தம் என்பது செயல்திறனை அதிகரிக்க தேவையான ஒன்று. ஆனால் அதுவே செயல்திறனையும் பிற தினசரி செயல்பாடுகளையும் பாதிக்க நேர்ந்தால் அது பிரச்சினைக்குறியதாக மாறி விடும்” என்று குழந்தை மன நல மருத்துவரும் ஆலோசகருமாகிய பூர்வா ரானடே, சமீபத்தில் பெங்களூரில் ஹேப்பியஸ்ட் ஹெல்த் நடத்திய ‘கெட் செட் குரோ! (Get Set, Grow!) என்ற பிள்ளைகளுக்கான மாநாட்டில் தெரிவித்தார்.
நிர்வகிக்க முடியாத மன அழுத்தம் மன நலத்தை பாதிக்கும்
“பிள்ளைகளின் வாழ்க்கை அனுபவம் குறைவு. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை விளக்க அவர்களால் வார்த்தைகள் மூலமோ உணர்ச்சி வாயிலாகவோ வெளிப்படுத்த முடியாமல் போகலாம்” என்று டாக்டர் ரானடே தெரிவிக்கிறார். பிள்ளைகள், அதுவும் குறிப்பாக பதின்பருவத்தில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தைச் சமாளிக்க பெரிதும் சிரமப் படுகிறார்கள்.
எதிர்பார்ப்பு என்பது இதில் பெரும் பங்கு வகிப்பதாக மகேஷ் யாதவ் (கல்வித் தலைவர், தென்னிந்தியா, ஆலன் தொழில் நிறுவனம், பெங்களூர்) கூறுகிறார். “வழிகாட்டிகளோ, பெற்றோர்களோ, ஆசிரியர்களோ இந்த எதிர்பார்ப்புகளை விதைக்கின்றனர. இந்த எதிர்பார்ப்புகளை எட்ட முடியாதபோது பிள்ளைகளுக்கு மன அழுத்தம் வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.
மன அழுத்தத்தின் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதைவிட அது ஏற்படுவதற்கான காரணிகளைக் கவனியுங்கள்
பதின்பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு மனம் மற்றும் உடல் ரீதியில் ஏற்படும் மாற்றங்களை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மாற்றங்களுக்கு நடுவே கல்விகள், குறிப்பாக போட்டித் தேர்வுகள் பிள்ளைகளுக்குக் கூடுதல் மன அழுத்தத்தைக் கொடுத்து அவர்களின் மன நலத்தை பாதிக்கும். “கோபம், எதிர்க்கும் குணம், இன்சாம்னியா, தூக்கத்தில் தொந்தரவு மற்றும் பிற நடவடிக்கை சார்ந்த மாற்றங்களுக்கு பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தம்தான் மூல காரணமாக அமையும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும் என்று ரானடே அறிவுறுத்துகிறார். “மன அழுத்தத்தின் அறிகுறிகளுக்குப் பதிலாக அதற்கான காரணிகளைக் கவனிப்பதே முக்கியம்” என்கிறார் அவர்.
அவரது கூற்றை ஏற்கும் நீரஜ் குமார் (பீக் மைண்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி) பிள்ளையின் மன நலன் மிகவும் முக்கியம் என்பது பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார். “பிள்ளைகள் தங்களின் மன நலனைப் பேணுவதற்கு பெற்றோர்கள் உதவுவது என்பது ஒரு நாளில் நடக்கக்கூடிய விஷயம் அல்ல” என்று குமார் கூறுகிறார். பிள்ளைகளுக்கான கல்வித் திட்டத்திலேயே மன அழுத்தத்தைச் சமாளிப்பது தொடர்பான பாடத்தை வைக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்
தற்காலத்தில் நியூக்கிலியர் குடும்பங்கள் என்ற மாற்றம் அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும் என்றும் குமார் கூறுகிறார். “பெரும்பாலான பிள்ளைகளால் தங்கள் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்தச் சிக்கல்களை மனம் திறந்த மற்றும் ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் சரிசெய்யப்பட வேண்டும். பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் பாதுகாப்பான மற்றும் புரிதலுடன்கூடிய சூழலை உருவாக்குவதுதான் சிறந்த உபாயமாகும். மன அழுத்தம் காரணமாக தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் போக்கு, பதட்டம் போன்ற பிரச்சினைகள் இருப்பது சமீபத்தில் பரவலாகக் கண்டறியப்படுகின்றன. “பிள்ளைகளுக்குப் பொறுமையாகச் சொல்லி புரிய வைப்பது எளிது” என்றும் அவர் கூறுகிறார்.
வீட்டில் இல்லாமல் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ஹோம் சிக்னஸ் என்று சொல்லக்கூடிய வீட்டை விட்டு தள்ளி இருப்பதால் ஏற்படும் சிக்கல் காரணமாக எழும் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்று குமார் கூறுகிறார்.
பிள்ளைகளை விளையாட விடுங்கள்
பிள்ளைகள் தினமும் எட்டு மணிநேரத்திற்கு மேல் படிப்பதற்குச் செலவிடுகின்றனர். புத்துணர்ச்சி அடைவதற்கான நேரமே அவர்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை என்று யாதவ் கூறுகிறார். “தினமும் பிள்ளைகளுக்கு விளையாடுவதற்கு என்று நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இது அவர்களின் நியூரான்களை ஊக்குவித்து அவர்கள் மன அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாள உதவுவதுடன் கல்வித் திறனும் மேம்படும்” என்கிறார் யாதவ்.
அவர்களின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள்
இளம் பருவத்தினரின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள பெற்றோர்கள் போதுமான முயற்சி எடுக்காததே மோதல்களுக்கு மிகப்பெரிய காரணம். குறிப்பாக மனநலம் மற்றும் வாழ்க்கையின் பிற அம்சங்களைப் பற்றி பெற்றோர்கள் சில முன்முடிவுகள் மற்றும் கருத்துகளைப் பெற்றோர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு பெற்றோர்கள் உதவ பின்வரும் வழிகளில் சமாளிக்க பெற்றோர்களுக்கு குமார் அறிவுறுத்துகிறார்:
- உங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான இலக்குகளை அமைத்து அதை அடைவதற்கு அவர்களைப் பயிற்றுவியுங்கள்
- தேவைப்படும்போது வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசகர்களின் உதவியை நாடுவது நல்லது
- குழந்தைகளுடன் திறந்த, நேர்மையான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு இடமளிக்கவும். அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கவும் அதன் மூலம் பிணைப்பை வலுப்படுத்தவும் முடியும்.
- ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் கட்டணம் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் குறித்தும் பட்ஜெட் மற்றும் பணப் பிரச்சனைகளைப் பற்றியும் குழந்தையுடன் விவாதிக்கவும்.
- பிள்ளைகளுக்கு ஆதரவாகவும் புரிந்துணர்வோடும் இருங்கள்
- உங்கள் பிள்ளையின் பலம், பலவீனங்களைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு சைக்கோமெட்ரிக் சோதனைக்கு உங்கள் பிள்ளையைச் செல்லச் சொல்லுங்கள்.
அனைவரும் ஒரே துறைக்கு போட்டியிடுவதால் வரும் சிக்கல்
பல குழந்தைகள் பொறியியல் மற்றும் மருத்துவத் தொழிலில் சேர விரும்புவதால், பெற்றோர்கள் மட்டும் குற்றம் சொல்ல வேண்டியதில்லை என்கிறார் குமார். அவர் கூறுகிறார், “குழந்தைகளுக்கு பல்வேறு தொழில்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள், மேலும் அதன் நுணுக்கங்களை வெளிப்படையாக விவாதிக்கவும்.
பிள்ளைகளிடம் பேசுவது முக்கியம்
மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் பெற்றோர்கள் குழந்தைக்கு உதவ வேண்டும் மற்றும் இந்தப் போட்டித் தேர்வுகளின் பரந்த நன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். “தோல்வியைக் கொண்டாடுவது மற்றும் தோல்வி என்றால் என்ன என்று கற்பிப்பது மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கியமானது” என்று யாதவ் விளக்குகிறார். குமாரின் கூற்றுப்படி, “நீங்கள் சொல்வது அல்ல, ஆனால் நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் என்பதே மாணவர்களுக்கு மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது.”
தெரிந்துகொள்ள வேண்டியவை
- போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி தொடர்பான அழுத்தம் குழந்தைகளிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- பெற்றோர்கள் மட்டுமே குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அல்ல, சமூகமும் குழந்தைகளைத் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகிறது.
- உங்கள் பிள்ளையை கல்வி நோக்கங்களுக்காக அனுப்பும்போது வலுவான ஆதரவாக இருங்கள். உங்கள் குழந்தையின் திறன்களைப் பற்றி ஆரோக்கியமான எதிர்பார்ப்புகளை அமையுங்கள். மன அழுத்த மேலாண்மையில் குழந்தைக்கு பயிற்சி அளியுங்கள்.