கோடை வெப்பம் உங்கள் சருமத்தை பாதிக்கலாம். சூரிய ஒளி, காற்று, UV கதிர்கள், ஈரப்பதம் இவை அனைத்தும் நீரிழப்பிற்கு வழிவகுத்து சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனால் கவலை வேண்டாம். இந்த எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சருமத்தைப் பாதுகாக்கலாம், நீரேற்றத்துடன் வைத்திருக்கலாம் மற்றும் ஆரோக்கியத்துடன் வைத்திருக்கலாம்.
சன்-ஸ்கிரீனை அடிக்கடி பயன்படுத்துங்கள்
குறைந்தது SPF 30 உள்ள பரந்த பலன்களைத் தரக்கூடிய சன்-ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை UVA மற்றும் UVB கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்தும் தோல் முதுமை அடைவதில் இருந்தும் பாதுகாக்கும்.
உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள்
பனிக் காலத்தில் வறண்ட காற்று வீசுவதைப் போல இல்லாவிட்டாலும் கோடை காலத்தில் வீசும் காற்றும் சருமத்தின் ஈரப் பதத்தைப் பாதிக்கும். SPF அடங்கிய திடமில்லாத மாய்ச்சுரைஸர்களைப் பயன்படுத்துவதால் சருமத்திற்கு நீரேற்றம் கிடைப்பதுடன் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.
வாரத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ ஸ்கிரப் செய்யுங்கள்
ஸ்கிரப் செய்வதால் சருமத்தில் இருக்கும் சிறு துளைகள் சுத்தப்படுத்தப்படும். ஆனால் உங்களுக்கு உடல் சூட்டினால் கட்டி இருந்தால், அது சரி ஆகும் வரை ஸ்கிரப் செய்யாதீர்கள். அதிகமாக ஸ்கிரப் செய்தால் ஆரோக்கியமான தோல்கூட பாதிக்கப்படும்.
சூரிய ஒளிக்கு எதிராகப் பாதுகாப்பு வழங்குபவற்றை அணியுங்கள்
சூரிய ஒளிக்கு எதிராக உங்களுக்கு முதல் பாதுகாப்பு என்னவென்றால் அதற்கேற்ற ஆடைகளையும், உபகரணங்களையும் பயன்படுத்துவதுதான். தொப்பி, சன்-கிளாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தினால் உங்கள் முகம், கண்கள், தோல் ஆகியவை பாதுகாப்பாக இருக்கும். இதனால் சன்-ஸ்கிரீனை மட்டுமே நீங்கள் சார்ந்திருக்க வேண்டியிருக்காது.
பருவகாலத்திற்கு ஏற்ற பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்
கீரைகள், வெள்ளரிக்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக்கும். சிட்ரஸ் வகை பழங்கள், தர்பூசணி, கிர்ணி போன்ற பருவகால பழங்கள் உங்கள் தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதில் வைட்டமின் C இருப்பதும் உங்கள் சருமத்திற்கு நல்லது.
சருமத்திற்கான 5 வீட்டு வைத்தியங்கள்
மஞ்சள்:
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது அழற்சியைக் குறைக்கும், கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராகச் செயல்படும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
தேன்:
தேனில் பேக்டீரியாவிற்கு எதிரான குணம் உள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தப்படுத்தும். அதில் உள்ள ஆண்டி-ஆக்சிடன்ட்கள் பொலிவான சருமத்தை வழங்கும். அதன் ஈரப்பதம் உண்டாக்கும் தன்மை உங்கள் தோல் ஆரோக்கியத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தைக் கொடுக்கும்.
கடலை மாவு:
இது ஸ்கிரப் செய்ய உதவும். கூடுதல் எண்ணை தோலில் இருந்தால் அதை உறிஞ்சும். இது சருமப் பொலிவிற்கு வழிவகுப்பதோடு முகப் பருக்களைப் போக்கும். ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்திற்கு இது நல்லது.
பப்பாளி:
பப்பாளியில் உள்ள நொதிகள், வைட்டமின்கள், ஆண்டி-ஆக்சிடன்ட்கள் ஆகியவை சருமத்திற்கு புத்துணர்வூட்டும். கருவளையங்களைக் குறைக்கும், சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கற்றாழை:
கற்றாழையானது சருமத்திற்கு நீரேற்றத்தை உறுதிப்படுத்தும், சருமத்திற்கு தேவையான ஊட்டச் சத்துகளை வழங்கும், அழற்சியைக் குறைக்கும், இதன் மூலம் இது ஆரோக்கியமான சருமத்திற்கு வழுவகுக்கும்.