ஜூன் 13, 1922 அன்று, நெப்ராஸ்காவுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் எடை போடுவதற்காக 158 கிலோ எடையுள்ள பன்றிகளை தொங்கவிட முயன்றபோது சார்லஸ் ஆஸ்போர்ன் என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அவர் “எதுவும் உணரவில்லை” என்றாலும், அவரது மூளையில் “முள் அளவுள்ள இரத்த நாளம் வெடித்து விட்டது” என்று அவரது மருத்துவர் பின்னர் அவரிடம் கூறியதாக ஆஸ்போர்ன் பீப்பிள் பத்திரிகைக்கு 1982-இல் கூறினார். அந்த நாளுக்குப் பிறகு, ஆஸ்போர்ன் இடைவிடாமல் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் விக்கல் எடுத்தார். அவரது மருத்துவரான, இல்லினாய்ஸைச் சேர்ந்த டாக்டர் டெரன்ஸ் அந்தோனி, விபத்தில் “மூளைத் தண்டில் ஒரு சிறிய பகுதி சிதைந்துவிட்டது, அந்தப் பகுதிதான் விக்கல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு உதவுவது” என்று கூறினார். 1991-ஆம் ஆண்டு இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு வரை ஆஸ்போர்னுக்கு விக்கல் வந்தது. நிமிடத்திற்கு 20 விக்கல்கள் என்ற விகிதத்தில், ஆஸ்போர்ன் தனது வாழ்நாளில் குறைந்தது 420 மில்லியன் முறை விக்கல் செய்தார் என்று பத்திரிகை கூறுகிறது. 1922 முதல் 1990 வரை 68 வருடங்கள் நீடித்த விக்கல் எடுத்ததற்கான கின்னஸ் உலக சாதனையை அவர் இன்னும் வைத்திருக்கிறார்.
ஆஸ்போர்னுக்கு ஏற்பட்டது அசாதாரணமானது என்றாலும், சிறிது நேரம் தொடர்ச்சியாக விக்கல் வந்தவர்களால் அவர் எதிர்கொண்டிருக்கக்கூடிய சிரமத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
விக்கல் வருவதால் பயன் ஏதேனும் உள்ளதா?
இது நடந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் மனிதர்களுக்கு விக்கல்கள் என்ன நோக்கத்திற்காக உதவுகின்றன என்பதை விஞ்ஞானிகளால் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டியின் ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் ஹெபடாலஜி பேராசிரியரான டாக்டர் பீட்டர் கஹ்ரிலாஸ், ‘எங்களுக்கு ஏன் விக்கல் வருகிறது?’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையில், கருப்பையில் இருக்கும்போதே விக்கல் தோன்றும் என்றும், பிறந்த குழந்தையாக இருக்கும்போதும் விக்கல் ஏற்படும் போக்கு தொடர்கிறது என்றும் கூறினார். குறைமாதக் குழந்தைகள் சராசரியாக 2.5 சதவீத நேரத்தை விக்கல் செய்வதில் செலவிடுவதாக அவர் கூறினார்.
விக்கல் என்பது கருப்பையில் இருக்கும்போதும் பிறந்த குழந்தையாக இருக்கும்போதும் ஏற்படுவதற்கு அல்லது நிற்பதற்கு எது தூண்டுதலாக இருக்கிறது என்பது கண்டறியப்படவில்லை” என்று டாக்டர் கஹ்ரிலாஸ் கூறுகிறார். “பெரினாட்டல் காலத்தில், சுவாசப்பாதை விரைவாக முதிர்ச்சியடைய வேண்டியிருக்கும் காலத்தில், குழந்தையைப் பாதுகாப்பதில் பெரும் பங்காற்றுவதாகத் தெரிகிறது.”
பலர் உணவு, மது அல்லது இரண்டையும் அதிகமாக உட்கொண்ட பிறகு விக்கல் வரலாம், சில சமயங்களில் விக்கல் தீர்க்க முடியாததாகி (கட்டுப்படுத்த முடியாதது), தூக்கமின்மை மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். இருப்பினும், வாந்தி மற்றும் இருமல் போலல்லாமல், விக்கல் பெரியவர்களில் பெரிய நன்மை எதுவும் செய்வதில்லை. இருமல் மற்றும் வாந்தி என்பவை ஒருவிதத்தில் உடலின் நன்மைக்கே வருகின்றன.
பரிணாம வளர்ச்சியின் விளைவாக மக்கள் விக்கல் வருகிறது என்பது மற்றொரு பிரபலமான கோட்பாடு. அமெரிக்க பரிணாம உயிரியலாளர் நீல் ஷுபின் தனது ‘உங்கள் உள் மீன்’ புத்தகத்தில், விக்கல் மற்றும் செவுள் சுவாசம் ஒரே நிகழ்வு என்று கூறுகிறார்.
வட கரோலினா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் உயிரியலாளரும், பயன்பாட்டு சூழலியல் துறையின் பேராசிரியருமான ராப் டன், முதல் காற்றை சுவாசிக்கும் மீன் மற்றும் நீரில் வாழும் உயிரினங்கள் நீருக்கடியில் சுவாசிக்க செவுள்களைப் பயன்படுத்தியது என்றும் நிலத்தில் இருக்கும்போது அது வளர்ச்சி அடியாத நுரையீரல் வடிவமாகும் என்று குறிப்பிடுகிறார்.
ஸ்மித்சோனியன் பத்திரிகையில் ஒரு கட்டுரையில் டன், “நீருக்கடியில் இருக்கும்போது, விலங்குகள் தங்கள் செவுள்களைப் பயன்படுத்தி தண்ணீரைத் தள்ளுகின்றன. “இந்த விலங்குகளின் வழித்தோன்றல்களான நம்மிடம் விக்கல் உட்பட அவற்றின் சில விஷயங்களும் எஞ்சி உள்ளன. விக்கலில், உறிஞ்சும் போது குளோட்டிஸை விரைவாக மூடுவதற்கு பழங்கால தசைகளைப் பயன்படுத்துகிறோம் (இப்போது தண்ணீர் அல்ல, வெறும் காற்றுதான்).
‘ஹிக்’ ஒலிக்கு என்ன காரணம்?
விக்கல் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ‘ஹிக்’ ஒலி வெளிப்படுவதற்குக் காரணமான உடல் நடத்தை நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
நவி மும்பை அப்பல்லோ மருத்துவமனையின் இரைப்பைக் குடலியல் ஆலோசகர் டாக்டர் புருஷோத்தம் வசிஸ்தா, எளிமையாகச் சொல்வதானால், விக்கல்களுடன் தொடர்புடைய ‘ஹிக்’ என்ற சத்தம் டயஃப்ரம்மின் திடீர் சுருக்கத்தால் ஏற்படுகிறது என்று கூறுகிறார்.
பெங்களூரு, சக்ரா வேர்ல்ட் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் சச்சின் குமார் கூறுகையில், “உங்கள் உடலில் விக்கல் மிகவும் குறைவாகத்தான் தொடங்குகிறது – நுரையீரல் மற்றும் வயிற்றுக்கு இடையே உள்ள குவிமாட வடிவில் இருக்கும் தசையான டயஃப்ரம்மில்தான் இது தொடங்குகிறது .
பொதுவாக, நுரையீரலுக்குள் காற்றை உள்ளிழுக்கும்போது டயஃப்ரம் கீழே இழுத்து, சுவாசிக்கும்போது ஓய்வெடுக்கிறது, இதனால் காற்று உங்கள் நுரையீரலில் இருந்து வெளியேறி மூக்கு மற்றும் வாய் வழியாக வெளியேறும்.
“ஆனால் உங்கள் டயஃப்ரம்மைஏதாவது எரிச்சலூட்டினால், அதில் பிடிப்பு ஏற்படலாம், திடீரென்று உங்கள் தொண்டைக்குள் காற்றை அது உறிஞ்சும், அது உங்கள் குரல் பெட்டியைத் தாக்கும்,” என்று அவர் கூறுகிறார். “இது உங்கள் குரல் நாண்களை திடீரென மூடுகிறது, இதனால் தனித்துவமான ‘ஹிக்!’ ஒலியை உருவாகிறது.”
விக்கல்களின் குறுகிய அத்தியாயங்களைப் பற்றி பேசுகையில், டாக்டர் வசிஷ்தா, விக்கல்கள் குறிப்பிட்ட மற்றும் நிலையற்ற காரணங்களால் ஏற்பட்டால், அவற்றை நிறுத்துவது கடினம் அல்ல என்று கூறுகிறார். நீண்ட காலம் (48 மணி நேரத்திற்கும் மேலாக) நீடிக்கும் விக்கல்கள் பற்றி கூறும்போது “இருப்பினும், குறிப்பிட்ட குறைபாடுகளுக்கு நாம் காரணங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்,” என்று சொல்கிறார்,.
அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனமான அரிதான கோளாறுகளுக்கான தேசிய அமைப்பின் கூற்றுப்படி, நாள்பட்ட விக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சில நோய்களில் குடிப்பழக்கம், ப்ளூரிசி (இந்த நிலையில் நுரையீரல் வீக்கமடைகிறது) டயாஃப்ரம், நிமோனியா, யுரேமியா (இரத்தத்தில் நச்சுகள் உருவாகும் நிலை, சிறுநீரகம் அவற்றை வெற்றிகரமாக வடிகட்ட இயலாமையால் ஏற்படுகிறது), வயிறு அல்லது உணவுக்குழாய் மற்றும் குடல் நோய்கள்.
விக்கல்களை நிறுத்துவது எப்படி: உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகள்
உங்களைப் பற்றி யாரோ ஒருவர் நினைத்தால் விக்கல் வரும் என்று கூறப்படுவது முதல் திடுக்கிட வைத்து விக்கலை நிறுத்துவது வரை, இந்த எளிய மனித நடத்தை பற்றி பல தவறான எண்ணங்கள் உள்ளன. ஆனால் கட்டுக் கதைகளில் இருந்து உண்மைகளைப் பிரிப்பது முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விக்கல் என்பது டயஃப்ரம்மின் தன்னிச்சையான சுருக்கங்கள் என்பதால், இந்த சுருக்கங்களை நிறுத்துவதற்கான வழிகளைப் பற்றி ஒருவர் சிந்திக்க வேண்டும் என்று டாக்டர் குமார் கூறுகிறார்.
தொடர்ச்சியான விக்கல்களுக்கு (48 மணிநேரத்திற்கு மேல் நீடிக்கும் எபிசோடுகள்), மூல காரணத்தைச் சரிபார்க்க மருத்துவரை அணுகுமாறு அவர் பரிந்துரைக்கிறார். “சிகிச்சையானது மூல காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளிப்பதே சிறந்தது” என்கிறார் டாக்டர் குமார். “எனவே, தொடர்ந்து விக்கல் இருந்தால், ஒரு மருத்துவரை சந்தித்து, இரத்த பரிசோதனைகள் மற்றும் வயிற்றின் அல்ட்ராசவுண்ட் போன்ற சில அடிப்படை சோதனைகளை பின்பற்ற வேண்டும்.”
விக்கல் பற்றிய சில பொதுவான தவறான கருத்துக்கள் என்னவென்றால், நீங்கள் வாயின் மேற்புறத்தை கதடவுவதன் மூலமோ அல்லது பயமுறுத்துவதன் மூலமோ அதை நிறுத்தலாம் என்று கருதுகின்றனர்.
அதற்குப் பதிலாக சில சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்குமாறு டாக்டர் குமார் பரிந்துரைக்கிறார்:
மூச்சை உள்ளிழுத்து, சுமார் 10 வினாடிகள் மூச்சைப் பிடித்துக் கொண்டு, பின்னர் வெளிவிடும் முன் மேலும் இரண்டு முறை உள்ளிழுக்கவும்.
பையால் தலையை மூடிக் கொள்ளாமல் ஒரு காகிதப் பையில் சுவாசிப்பதும் விக்கலை நிறுத்தும்.