மனிதவளத் துறை வல்லுனராக இருந்து தோல் பராமரிப்பு மற்றும் ஒப்பனை-ஆலோசகராக மாறிய பரோமிதா டெப் அரெங் கூறுகையில், திருப்தியாகச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் நள்ளிரவுக்கு முன் தூங்கச் சென்று ஏழு முதல் எட்டு மணிநேரம் வரை போதுமான அளவுக்குத் தூங்குவது போன்ற மூன்று விஷயங்களில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறுகிறார். இது தான் ஆரோக்கியமாக இருப்பதற்கும், தனக்குக் குறைபாடற்ற சருமம் இருப்பதற்கும் காரணம் என்று கூறும் அவர் இந்த வழக்கத்தை அவர் தவறாமல் கடைபிடிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
“சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்தபோது, என் தோல் மந்தமாக இருப்பதையும், வாயைச் சுற்றி நிறமாற்றம் இருப்பதையும், அத்துடன் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு இருப்பதையும் கவனித்தேன்” என்று பரோமிதா கூறுகிறார். “எனது ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, மனித வள பணியாளராக இருந்ததால் அதிகப் பணிச் சுமையின் காரணமாக, என் சருமம் பாதிக்கப்பட்டது.
புனேவைச் சேர்ந்த 42 வயதான இவர் தோல் முதுமையடைவது மற்றும் மறு உருவாக்கம் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார், மேலும் இவர் நள்ளிரவுக்கு முன் தூங்குவதை வழக்கமாக்கிக் கொண்டதால் தன்னுடைய தோல் முற்றிலும் பொலிவாக மாறியிருப்பதாகத் தெரிவிக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதும், ஆழ்ந்த தூக்கமும்தான் தன்னுடைய தோல் பொலிவாக இருப்பதற்கான மந்திரம் என்று கூறுகிறார். இப்போது கார்ப்பரேட் உலகில் உள்ள பெண்களுக்குத் தோல் பராமரிப்பு, அழகு மற்றும் ஒப்பனை குறித்து தனது வொர்க்ஷாப் (workshop) மூலம் உதவுகிறார்.
பல தலைமுறைகளாக, வயதானாலும் நம்முடைய பாட்டிகளின் பொலிவான சருமத்திற்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கும் பின்னால் இருக்கும் ரகசியம் ஆரோக்கியமான உணவு முறையும், நள்ளிரவுக்கு முன் தூங்குவதும் தான் என்று இவர் வலியுறுத்திக் கூறுகிறார்.
இரவு நேர ஆழ்ந்த தூக்கம்தான், நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் சிறந்தது என்பதை யாராலும் இதற்கு மேல் வலியுறுத்திக் கூற முடியாது.
தூக்கமின்மை முகச் சருமத்தை பாதிக்கிறது
ஒரு மனிதனுக்குத் தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், அது அவனுடைய உடல், மனம், மற்றும் தோற்றம் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகளும் மருத்துவ வல்லுநர்களும் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஸ்லீப் மெடிசனின் கூற்றுப்படி, நிம்மதியான தூக்கம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கிறது; மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது; நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
சர்க்காடியன் ரிதம் என்பது, தூக்கம் மற்றும் விழிப்பு, ஹார்மோன்களின் வெளியீடு மற்றும் உடல் வெப்பநிலை போன்ற வெவ்வேறு சுழற்சிகளை உள்ளடக்கியது. இந்த சுழற்சியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அது நம் உடல் செயல்பாடுகளைப் பாதிக்கும், அத்துடன் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பெங்களூரில் உள்ள ஆபிரகாம்ஸ் ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் டெர்மடாலஜிஸ்ட் (dermatologist) மற்றும் ட்ரைக்கோலஜிஸ்ட் (trichologist) டாக்டர் அனில் ஆபிரகாம் கூறுகிறார்.
“எனவே, ஒரு நபருக்கு போதுமான ஓய்வு கிடைக்கவில்லை என்றால், அது சோர்வு, தளர்ந்த சருமம் மற்றும் முகம் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும்,”என்று அவர் கூறுகிறார்.
“குறிப்பாக நீண்ட நாட்கள் ஒழுங்காகத் தூங்காமல் இருந்தால். இந்த மாற்றங்களை ஒரு மருத்துவர் மட்டுமல்ல, சாதாரண மனிதர்கள் கூட எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்,
எனவே, நள்ளிரவுக்கு முன் தூங்குவதால், தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம்முடைய பாரம்பரியத்தில் மட்டும் கிடையாது, அறிவியல் பூர்வமாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது.”
நள்ளிரவிற்கு முன் தூக்கத்தின் பின்னால் உள்ள அறிவியல்
நாம் தூங்கும் போது நம்முடைய உடலும் மனமும் முழு ஓய்வு நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் தான் செல்களின் பழுதுநீக்கம் மற்றும் மீளுருவாக்கம், உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுதல் மற்றும் ஹார்மோன் ஒழுங்குமுறை போன்ற பல்வேறு செயல்முறைகள் நம் உடலில் நடைபெறுகிறது.
“இரவு நேரங்களில், சருமத்தின் பல்வேறு அடுக்குகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இது சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது” என்று பெங்களூரைச் சேர்ந்த தோல் மருத்துவரும் அழகு சாதன நிபுணருமான டாக்டர் சித்ரா வி ஆனந்த் கூறுகிறார். “கொலாஜன் மற்றும் எலாஸ்டின் (உடலில் உள்ள புரதங்கள்) தோல் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையைப் பராமரிக்கவும், மந்தநிலையைத் தடுக்கவும் செயல்படுகின்றன.”
“வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியால் ஏற்படும் தழும்புகள் அல்லது காயங்கள் குணமடையத் தொடங்குவதை உறுதி செய்கிறது மற்றும் மெலடோனின் ஹார்மோன் அதிகரிப்பால் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதைத் தடுக்கிறது. நாம் படுக்கும் போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாகிறது, இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற அனுமதிக்கிறது.”
தூக்கமின்மை, குணப்படுத்தும் செயல்முறையைச் சீர்குலைக்கிறது மற்றும் சருமத்தை முன்கூட்டிய முதுமை அடையச் செய்கிறது, இது ஒரு நபரை வெளிர் மஞ்சள் நிறமாக மற்றும் சோர்வாகத் தோற்றமளிக்கிறது. “கருவளையங்கள் தோன்றலாம் மற்றும் கண்கள் மற்றும் வாயைச் சுற்றியுள்ள கோடுகள் அதிகமாக உருவாகும்” என்று டாக்டர் ஆனந்த் கூறுகிறார்.
மனிதவள நிபுணரான பரோமிதா கூறுகையில், “இருபதுகளில் இருக்கும்போது, மறுசுழற்சி வேகமாக நிகழ்கிறது, இதனால் சில நாட்கள் தூக்கமின்மை சருமத்தைப் பெரிதாக பாதிக்காது.
ஆனால் பெண்கள் மெனோபாஸ் கட்டத்திற்கு முந்தைய நிலையை நெருங்கும்போது, தூக்கமின்மையால் உடனடியாக கருவளையங்கள் தோன்றும், வீங்கிய கண்கள் மற்றும் தோல் மீதான கவனம் குறைவதால் தோல் சோர்வாகத் தோற்றமளிக்கும்.”
எனவே, நள்ளிரவுக்கு முன் தூங்குவதன் நன்மைகளை அதிகரிக்க, இரவு நேர வழக்கத்தில் ஒரு நல்ல ஆன்டி ஏஜீங் ப்ராடக்ட் மற்றும் ஒரு ஹைட்ரேட்டிங் கிரீம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம், இது சருமம் தண்ணீரை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும்.
நள்ளிரவுக்கு முன் தூங்குவதற்கான உதவிக்குறிப்புகள்
டாக்டர் ஆனந்த் பளபளப்பான சருமத்தைப் பெற, பின்வரும் குறிப்புகளை வழங்குகிறார்:
- தூங்கச் செல்வதற்கு முன் முகத்தைச் சுத்தம் செய்து அழுக்கு, தூசி மற்றும் ஒப்பனை ஆகியவற்றை நீக்கவும்.
- நல்ல நிம்மதியான தூக்கத்தை வரவழைக்க, நேர்மறையான எண்ணங்களுடன் அமைதியான மற்றும் நிதானமான சூழலில் தூங்குவதற்குச் செல்லுங்கள்.
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருங்கள் மற்றும் இரவில் உங்கள் சருமத்தைப் புத்துணர்ச்சியூட்டும் ஒரு எளிய ஸ்கின்கேர் வழக்கத்தைப் பின்பற்றுங்கள்.
- மன அழுத்தத்தைத் திறம்படக் கையாளுங்கள்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் நிம்மதியான தூக்கத்தை மேம்படுத்த ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
- உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பிறகு மெக்னீசியம் அல்லது மெலடோனின் சப்ளிமெண்ட்ஸை எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றாக ஆழ்ந்து தூங்குபவர்கள் vs அரைகுறையாகத் தூங்குபவர்கள்
2015-ஆம் ஆண்டு ஆய்வில், ‘அரைகுறைத் தூக்கம் தோலைப் பாதிக்குமா?’ என்று கிளினிக்கல் அண்ட் எக்ஸ்பெரிமென்டல் டெர்மட்டாலஜி இதழில் வெளியிடப்பட்ட, வயதான அறிகுறிகளுக்காக, சரிபார்க்கப்பட்ட மருத்துவக் கருவியைப் பயன்படுத்தி அரைகுறையாகத் தூங்குபவர்கள் மற்றும் நன்றாக ஆழ்ந்து தூங்குபவர்கள் என வகைப்படுத்தப்பட்ட பெண்களை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்தனர்.
அரைகுறையாகத் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது நன்றாக ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களுக்கு முன்கூட்டியே தோல் சுருங்குவது குறைதல் மற்றும் அதிக தோல் தடை மீட்பு இருப்பதைக் கண்டறிந்தது, அதே நேரத்தில் அரைகுறையாகத் தூங்குபவர்களுக்கு டிரான்ஸ்-எபிடெர்மல் நீர் இழப்பு அதிக அளவில் உள்ளது கண்டறியப்பட்டது. நன்றாக ஆழ்ந்து தூங்குபவர்கள் தங்கள் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் அரைக்குறையாகத் தூங்குபவர்களை விடத் திருப்தி அடைந்தனர்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
இரவு நன்றாக ஆழ்ந்து தூங்குபவர்களுக்குக் குறைபாடற்ற பிரகாசிக்கும் சருமம் கிடைக்கிறது. நள்ளிரவுக்கு முன் தூங்குவதால் சருமம் புத்துணர்ச்சியடைவதற்கும் பளபளப்பதற்கும் உதவுகிறது. மறுபுறம், தூக்கமின்மை உங்கள் சருமம் சுருக்கம் அடைவதுடன், அது மந்தமாகவும் நீரிழப்புடனும் இருக்கும். தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் முகத்தைச் சுத்தம் செய்து, அழுக்கு, தூசி மற்றும் மேக்கப்பை அகற்றவும். ஆரோக்கியமான தூக்கத்திற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.